அவன் இவன் படத்தில் தீர்த்தபதி (ஹைனஸ்) என்ற ஜமிந்தார் கேரக்டர் வரும். படத்தில் வரும் சிருவன் கூட ''யோவ் ஹைனஸூ'' என்று மரியாதையாக (!) அழைப்பான். கடைசியில் வில்லன், அம்மணமாக்கி அடித்துக்கொல்வான். இவ்வாறு சிறந்த (!) முறையில் அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.
மற்றொரு காட்சியில் ஆர்யா, சொரிமுத்தையனார் சாமி என்று சொல்லும் போது குரங்கு சொறிவது செய்கை காட்டுவர்.
இது போன்ற கேனத்தனமான காட்சிகளால் நெல்லை மாவட்ட மக்கள் கொதிப்பாகியுள்ளனர். 'சொரிமுத்து அய்யனார் பக்தர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருக்கும் கண்டன போஸ்டர்களில், 'சிங்கம்பட்டி ஜமீன்தாரையும், சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவமதிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தை இயக்கிய பாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்னதான் காமெடிக்காக என்றாலும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் வணங்கும் கடவுளையும், மதிக்கும் ஜமீன்தாரையும் அவமதிப்பது சரிதானா?
சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை எனக்கு நன்கு தெரியும். இன்றும் மக்களிடம் நன்மதிப்போடும், செல்வசெழிப்போடும் வாழ்ந்து வருபவர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கம்பட்டி ஜமீன் மூலமாக மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவரிடம் இதுபற்றி கேட்ட போது
''சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு, ஆயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. நாங்கள் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பதால், மக்களும் எங்கள் மீது பிரியமாக இருக்காங்க. எனக்கு 80 வயதாகிறது. ஒரு துறவியின் மனநிலைக்குப் போயிட்டேன். அதனால், என் மீது பூவை எறிந்தாலும், கல்லை வீசினாலும் கவலைப்பட மாட்டேன். படத்தில் என்னைத் தவறாக விமர்சனம் செஞ்சிருப்பதாக பலரும் சொன்னதை நான் கண்டுக்கலை. ஆனால், என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் ரொம்பவும் கோபத்தில், வேகத்தில் இருக்காங்க. அதனால் இந்தப் பிரச்னை பெருசாகிருச்சு.என்னையும் இந்த ஜமீனையும் பற்றி முன்பின் அறியாதவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா, பாலா எனக்கு உறவுக்காரப் பையன். படம் எடுக்கிற துக்கு முன்னால், என்னிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி இருக்கலாம். இப்போது இந்த அளவுக்கு ஆன பிறகாவது என்னிடம் பேசி இருக்கலாம். அல்லது அந்தக் கதாபாத்திரம் 'கற்பனையானது’னு கார்டு போட்டு இருக்கலாம். இது எதையும் செய்யலை. அப்படின்னா திட்டமிட்டே இதை செஞ்சதாதானே அர்த்தம். கொதிச்சுப்போன பலர் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டாங்க. நான்தான் அவங்களைத் தடுத்தேன். ஆனாலும், மதுரையில் இந்தப் படத்துக்கு தடை கோரி 150 பெண்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு முதல்வருக்கு மனு அனுப்பி இருக்காங்க. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சமாதானம் அடையாத என் மகன் சங்கராத்மஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செஞ்சி ருக்கார்...'' என்றார் ஆற்றாமையுடன்.
ஆனால் இயக்குனர் பாலாவோ ''படம் குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்?'' என்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்பை நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டு, பாலா, ஆர்யா, படத்தயாரிப்பாளர், ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.