Friday, August 27, 2010

அடிச்சாம்பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்.

  ''கால் காசானாலும் கவெர்மெண்ட் காசு வாங்கனும்'' என்று எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நானும் காலேஜ் முடிச்சதிலிருந்து பலமுறை TNPSC எழுதிவிட்டேன். அரசு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜாதகத்தில் அரசு வேலை யோகமில்லை என்று இடைகால் ஜோசியன் சொல்லிவிட்டான். அதோடு கிளினிக் வருமானம் போதுமானதாக இருந்ததால் முயற்சியை கை விட்டேன்.

  எனது முயற்சி கடவுளுக்கு தெரிந்ததோ இல்லையோ கவெர்மெண்ட்டுக்கு தெரிந்துவிட்டது... அடிச்சாம்பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்.....
 EMPLOYMENT SENIORITY மூலம் வேலை வந்தது. விழுப்புரம் மாவட்டம், கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ ஆலோசகராக.

  நான் இருப்பதோ தென்காசி. விழுப்புரத்திலிருந்து சுமார் 500 கிமீ தூரம். இதை விட கொடுமை சம்பளம். துவக்க பள்ளி ஆசிரியர் சம்பளத்தில் பாதி. கொத்தனார் சம்பளத்தை விட சற்று அதிகம். உண்மையில் அப்பத்தா சொன்ன கால் காசு தான். மாதம் 12,000 ரூபாய்.

   இருந்தாலும், அப்பத்தா ஆன்மாவை சாந்தி செய்வதற்காகவும், போலீஸின் மிகவும் தேடப்படுபவர் (MOST WANTED) லிஸ்டில் முதலிடத்தில் இருப்பதாலும்  விழுப்புரம் செல்வதென தீர்மானித்தேன்.

  கோண்டூரை தேடி கண்டுபிடிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. ஒரு வழியாக பாண்டிச்சேரிக்கு பக்கத்தில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கிராமத்தை கண்டுபிடித்து வேலையில் சேர்ந்தேன்
.
  சித்த மருத்துவ பிரிவிற்காக கக்கூஸை விட கொஞ்சம் பெரிய அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். அதில் நானும் பார்மஸிஸ்ட்டும் ஒருவரை ஒருவர் இடித்து கொள்ளாமல் சமாளித்தோம். தினமும் நாலு பெருசு தைலம் வாங்க வரும். அதில் ஒன்று தேய்த்து விட சொல்லி கடுப்பேற்றியது. தினம் வரும் ஏழு கேசை ஏழுபதாக காண்பித்து சாதனை ( ! ) புரிந்தேன்

    மற்ற மாவட்டங்களை போலல்லாமல்  விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும்  மூன்று DSMO .ஒருவர் Dr.பார்த்திபன் மற்ற இருவர் CLERK-1, CLERK-2. இவனுங்க அலும்பு தாங்க முடியாது.

  மாதமொருமுறை நடக்கும் DSMO MEETING -ல் NRHM மருத்துவர்களை நடத்தும் விதம் -...முடியல!!!...

  முடிவில் ஒரு சாம்பார் சாதம் கொடுப்பார்கள். ரெண்டு நாட்களுக்கு நம் மனதை விட்டு போகாது. ஏப்பமெல்லாம் சாம்பார் வாசம். அந்த மெனுவை இப்ப மாற்றிவிட்டார்களா தெரியவில்லை.

  ஒருமாதம் கழிந்தது. முதன்முதலாக கவெர்மெண்ட் காசு வாங்கும் ஆர்வத்தில் அலுவலகத்தை அணுகினால், '' சம்பளமா ! .'' இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் வரும் '' என்றார் கிளார்க். ..என்ன கொடுமை சார்.!....

 கோண்டூர் PHC யும், பாண்டிச்சேரி நண்பன் நெப்போலியன் அறையுமாக ( சத்தியமா நண்பன் பெயர் தான் நெப்போலியன் ) அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு இனிய காலை பொழுதில் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி  அழைப்பு!. ''சார் ! சம்பளம் வந்து வாங்கிக்கங்க ''

  அவசரமாக கிளம்பி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். சனியன், மஞ்சள் கலரில் மூன்று கால்களுடன் (ஆட்டோ என்ற பெயரில்) என் பின்னாடி வந்ததை நான் கவனிக்கவில்லை. ஒரே இடி..!.. கண் விழித்து பார்க்கும் போது மருத்துவமனை அறை மங்கலாக தெரிந்தது . டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார்.
  '' ஸ்பைனல்கார்டு இஞ்சுரி .மூன்று மாதம் பெட் ரெஸ்ட் எடுக்கணும். என்னவோ கால் காசு கவெர்மெண்ட் காசுன்னு உளறிக்கிட்டு இருந்தார். அதனால தலைக்கு சிடி ஸ்கேன் எடுத்திருங்க.!!!!...

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அப்பத்தா சொன்ன ”கால்”-காசு ஸ்பைனுக்கு கீழே உள்ள இரண்டு காலுக்கும் செலவழிக்கும் காசாக ஒருக்கால் இருக்குமோ!

    ReplyDelete
  3. ///ஸ்பைனுக்கு கீழே உள்ள இரண்டு காலுக்கும் செலவழிக்கும் காசாக///

    அதேதாங்க!

    ReplyDelete
  4. ஒரு ''கால் காசு'' வாங்கும் முன்பே
    ஒரு கால் போய்விடும் நிலை
    ஒருக்கால் வந்து விடுமோ என்னவோ.!. இனி
    ஒருக்காலும் வேலைக்கு போக மாட்டேன்

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா... மூணு மாசம் கழிச்சாச்சும் கால் காசு வாங்கினீங்களா இல்லையா? நல்ல பதிவு

    ReplyDelete